Tamilnadu

தஞ்சை கோவில் திருவிழா விபத்து : “அரசுக்கு தெரிவிக்காமல் விழா” - பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் எதிர்பாராத விதமாக உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில், இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இந்த தேர் விபத்து குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கிப் பேசினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் தஞ்சையில் தேர் திருவிழாவை ஊர் மக்கள் நடத்தியுள்ளனர். மேலும் களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்திருவிழாவும் அல்ல, அது தேரும் அல்ல, அது சப்பரம். திருவிழாவை ஊர் கிராம மக்களே ஒன்றுகூடி நடத்தியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தஞ்சை கோயில் திருவிழா விபத்து குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி குமார் ஜெயந்த் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Also Read: தேர்த்திருவிழாவில் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் - தஞ்சை விரைகிறார் முதலமைச்சர்!