Tamilnadu

பாசமாக வளர்த்த ஆட்டுக்காக உயிரை விட்ட இளைஞர் : கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்கும்போது நடந்த துயரம்!

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று வார விடுமுறை என்பதால் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். பிறகு வீட்டில் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, ஆட்டுக்குட்டி ஒன்று வயல் பகுதியிலிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனால் பதட்டமடைந்த மகாராஜன் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை மீட்க முயன்றுள்ளார். அந்நேரம் கயிறு பாரம் தாங்காமல் அறுந்துள்ளது. இதில் நிலைதடுமாறி மகாராஜனும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி நீரில் மூழ்கிய மகாராஜனைச் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கும்போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கொடும்பாளூர் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலிக்கு வேறு நபருடன் திருமணம்.. மரணத்தை திருமண பரிசாக கொடுப்பதாக WhatsApp Status வைத்த காதலன்!