Tamilnadu

செல்போனில் ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்.. காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் புகழ் கொடி (29). இவர் சரிதா (21) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு மனைவி சரிதா, ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசியுள்ளார். அதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புகழ் கொடி, மனைவி சரிதாவைத் தாக்கியதால் அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது.

பிறகு அடுத்தநாள் மனைவியை, தண்ணீர்க் குடம் எடுத்துச் செல்லும் போது கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டுள்ளது என கூறி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். ஆனால், புகழ்க்கொடியின் பேச்சில் மருத்துவர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் போலிஸார் அங்கு வந்து புகழ்கொடியிடம் விசாரித்ததில், வேறு ஒரு ஆண் நபருடன் செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சண்டையில் அடுத்ததில் சரிதாவின் தலையில் காயம் ஏற்பட்டது என புகழ்க்கொடி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரிதா, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, சரிதாவின் தாயார் சம்பூர்ணா, மருமகன் புகழ்கொடி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “சினிமா பாணியில் ஓடும் பைக்கில் ‘சாகச காதலில்’ ஈடுபட்ட காதலர்கள்..” : பதறவைக்கும் பகீர் வீடியோ காட்சி !