Tamilnadu

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : இதுவரை 220 பேரிடம் விசாரணை - நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்த விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இவ்வழக்கு தொடர்பாக தனிப்படை போலிஸார் மேலும் பலரிடம் விசாரணை நடத்த உள்ளதால் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது, பின்பு வழக்கினை விசாரணை செய்த பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் வழக்கினை எதிர்வரும் ஜீன் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், வழக்கு விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதாக கூறினார்.

இவ்வழக்கு தொடர்பாக மேலும் பல முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தி இருப்பதாலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதால் அவவழக்கு நிலுவையில் இருப்பதால் மேலும் சில கால அவகாசம் வேண்டும் என அரசு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஏற்ற பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் இவ்வழக்கினை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Also Read: “கொடநாடு பங்களாவில் என்னென்ன ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தது - சசிகலாவிடம் விசாரணை?” : போலிஸார் அதிரடி !