Tamilnadu

கால் இடறி கிணற்றில் விழுந்த பணிப்பெண் பலி.. மயிலாப்பூர் தனியார் நிறுவனத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?

சென்னை மயிலாப்பூர் ஆறுமுகம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 37). இவர் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் கம்பெனியில் இரண்டு வருடங்களாக துப்புரவு பணி செய்து வருகிறார்.

இப்படி இருக்கையில், நேற்று (ஏப்.,21) மாலை 4 மணி அளவில் உமாமகேஸ்வரி அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கிணற்றைச் சுற்றி துப்புரவு பணி செய்து கொண்டிருக்கும் போது கிணற்றின் ஒரு பகுதி உடைந்ததால் உமாமகேஸ்வரி கிணற்றிற்குள் விழுந்துள்ளார்.

பின்னர் துப்புரவு பணி மேற்கொண்டு இருந்த உமா மகேஸ்வரியை காணவில்லை என அலுவலகத்தில் பணியாற்றி வந்த மற்றொரு துப்புரவு பணியாளர் கல்யாணி என்பவர் கிணற்றின் ஒரு பகுதி ஸ்லாப் உடைந்து இருப்பதை கண்டு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து உள்ளார்.

அப்பொழுது உமாமகேஸ்வரி கிணற்றுக்குள் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போய் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பாக மயிலாப்பூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: நைட் ஷோ படம் பார்த்துவிட்டு வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. தலைமறைவாக இருந்த 6 பேர் கைது.. போலிஸ் அதிரடி