Tamilnadu

பொம்மை துப்பாக்கியை காட்டி சுங்கச் சாவடியில் ரகளை - 3 பேருக்கு ‘காப்பு’ மாட்டிய போலிஸ் !

மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கப்பலூரில் சுங்கச் சாவடி உள்ளது. இங்கு நேற்று இரவு காரில் வந்த மூன்று பேர் சுங்க கட்டணம் செலுத்த முடியாது என கூறியுள்ளனர். இதனால் இவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காரில் இருந்த ஒருவர் துப்பாக்கியை எடுத்து ஊழியர்களை நோக்கி சுடுவதுபோல் மிரட்டியுள்ளார். பின்னர் அவர்கள் காரை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இது குறித்து சுங்க ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு போலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காரின் எண்ணையும் பதிவு செய்து, அந்த கார் சென்ற வழியிலேயே இரு இரு சக்கர வாகனத்தில் போலிஸார் பின் தொடர்ந்து சென்றனர்.

இதையடுத்து அந்த கார் கப்பலூர் தொழிற்பேட்டை அருகே டீக்கடை ஒன்றில் நின்றிருந்ததை பார்த்த போலிஸார் காரில் இந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் இவர்கள் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், முத்துக்குமார், பொன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த இவர்கள், சிறுவர்கள் விளையாடக் கூடிய ஏர் பிஸ்டல் துப்பாக்கியை காட்டி மிரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் போலிஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கியை போலிஸார் பிறமுதல் செய்தனர்.

Also Read: 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்.. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்.. : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!