Tamilnadu

சுதாரிப்பதற்குள் தலையில் ஏறிய வாகனம்.. கணவன் கண் முன்னே துடிதுடித்து இறந்த மனைவி.. சாலை விபத்தில் கோரம்!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ஆர்எஸ் ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர் பூஞ்சோலை (வயது 55). அவரது மனைவி கற்பகம் (வயது 50). இவர்கள் தனது வீட்டில் தையல் தொழில் செய்து வருகின்றனர்.

இன்று காலை சுமார் 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் இருவரும் புழல் அடுத்த வினாயகபுரத்திலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது வழியில் புழல் காவல் நிலையம் அருகே கொல்கத்தா நெடுஞ்சாலையில் மாதவரம் நோக்கி வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இருவரும் எழுந்து சுதாரிப்பதற்குள் அதே வாகனத்தின் சக்கரம் கற்பகம் தலையில் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்து தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பூஞ்சோலை நூலிழையில் உயிர் தப்பினாலும் அவருக்கு கால் மற்றும் உடல்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை போக்குவரத்து போலிஸார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இத்தகவல் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸாருக்கு தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவை வைத்து விசாரணை நடத்தி வருகிறார். போக்குவரத்து மிகுந்த பகுதியில் கணவர் கண்முன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தடையை மீறி வனப்பகுதியில் நுழைந்த நபர்.. காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணி!