Tamilnadu

வகுப்பில் பாய் போட்டு படுத்த மாணவன்.. தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் - விசாரணைக்கு பிறகு நடவடிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் ஆசிரியராக பணிபுரிபவர் சஞ்சய். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் இருந்து பணிமாறுதல் பெற்று தற்போது மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாரி என்ற மாணவன், பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் தாவரவியல் ஆசிரியர் செய்முறை தேர்விற்காக கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை சமர்பிக்கும்படி கூறியுள்ளார். அப்போது மாரி என்ற மாணவன் ஆசிரியர் முன்னரே வகுப்பறையில் பாய் போட்டு படுத்துள்ளான். இதனை ஆசிரியர் தட்டிக்கேட்டபோது ஆசிரியரையே தாக்க முயன்றுள்ளான்.

இதனை சக மாணவர்களான யோனோ, செல்வகுமார் ஆகியோர் செல்போனில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் ஆம்பூர் வட்டாச்சியர் பழனி, பள்ளி தலைமையாசிரியர் வேலன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் மாணவன் ஆபாசமாக பேசியதாகவும், ஆசிரியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட மாரி, செல்வகுமார், யோனோ ஆகிய மூன்று மாணவர்களை மறு விசாரணை நடைபெறும் வரை பள்ளிக்கு வருகை புரிய அனுமதி இல்லை என அறிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை சமர்பித்தார். மேலும் கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டு பள்ளி தலைமையாசிரியர் வேலன், மூன்று மாணவர்களை மறு விசாரணை நடைபெறும் வரை பள்ளிக்கு வர அனுமதி இல்லை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சமூகத்தில் ஒழுக்கமாக வளர வேண்டும் என கோட்டாச்சியர் அறிவுரை வழங்கினார்.

Also Read: “'பண்பட்ட - சமமான' கல்விக்கு அடித்தளம் அமைக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்”: முரசொலி நாளேடு பாராட்டு!