Tamilnadu

“கொடநாடு பங்களாவில் என்னென்ன ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தது - சசிகலாவிடம் விசாரணை?” : போலிஸார் அதிரடி !

கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.

பின்னர், பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சோலூர் மட்டம் ேபாலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூன்று ஆண்டுகளாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் முதலில் இருந்து துவங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய், தீபு உட்பட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட இதுவரை 217 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ் மரணம் குறித்து பல கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கவுண்டம்பாளையம் முன்னாள் சட்டமன்ற அ.தி.மு.க உறுப்பினர் ஆறுக்குட்டியிடமும், ஆறு குட்டியின் மகன் மற்றும் உதவியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க-வின் கோவை மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்திய நிலையில், ஆறுகுட்டி மற்றும் அனுபவ்ரவி ஆகிய இருவரும் அளித்த தகவல்களை கேமரா மூலம் பதிவு செய்த தனிப்படை போலிஸார் மேலும் பல அ.தி.மு.க நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ,ஜி சுதாகர் தலைமையில் சென்னையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது?, ஆவணங்கள் மற்றும் கோப்புகள் குறித்தும், பங்களாவை யார் யார் பாதுகாத்து வந்தனர், ஜெயலலிதா இறப்புக்கு பின்னால் யார் யார் எஸ்டேட் பங்களாவிற்குள் சென்று வந்தது, இங்கு என்னென்ன ரகசியமான பொருட்கள், ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தது? போன்ற பல கேள்விகளை சசிகலாவிடம் கேட்க உள்ளனர்.