Tamilnadu

தொடர்ந்து மிரட்டி வந்த பாஜக வழக்கறிஞர்: ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட இன்ஜினியர்.. தென்காசியில் பகீர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே நேற்று காலையில் நடந்து சென்ற சிலர் அப்பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே இரண்டு துண்டாக சிதறிக் கிடந்த வாலிபரின் உடலை கண்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ந்து சென்ற போலிஸார் ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு பாவூர்சத்திரம் வழியாக கேரளாவுக்கு செல்லும் பாலருவி ரயிலில் சென்ற நேரத்தில்தான் நடந்திருக்கலாம் என போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் யார் என்ற விபரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, இந்த வாலிபர் பாப்பான்குளம் அருகே உள்ள ஏபி நாடனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சுரேஷ் என்ற சுப்பிரமணியன் ஆவார். பாவூர்சத்திரம் செல்வ விநாயகபுரத்தில் குடியிருந்து வசித்து வந்த இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

சுப்பிரமணியன் நேற்று முன்தினம் காலையில் காரில் வெளியே சென்றுள்ளார். அவர் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே காரை நிறுத்திவிட்டு பாலருவி எக்ஸ்பிரஸ் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

Also Read: பெண்கள் விடுதியில் மாணவிகளின் உடைகளை திருடி அணிந்து உலா வந்த இளைஞர் கைது!

தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஒரு பரபரப்பான வீடியோ ஒன்றை அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டு அதை தனது காரில் வைத்துவிட்டு அதன் பிறகுதான் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கிறார் என கண்டறியப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவில் தனது மனைவிக்கு ஒரு பதிவை செய்துள்ளார். அதில், குழந்தையை நன்றாக பார்த்துக்கொள் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய அரசு வழக்கறிஞர் என சொல்லிக் கொள்ளும் வழக்கறிஞர் ராமலிங்கம், சரவணன் ராஜ் ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும் இதனால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தையை தைரியத்தோடு வளர்க்க வேண்டும் எனவும் மனைவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பதிவை ஆதாரமாக கொண்டு போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சுதாரிப்பதற்குள் தலையில் ஏறிய வாகனம்.. கணவன் கண் முன்னே துடிதுடித்து இறந்த மனைவி.. சாலை விபத்தில் கோரம்!