Tamilnadu

“எல்லாத்துலயும் கமிஷன்தான்... பா.ஜ.க அரசின் தொடர் ஊழல்” : லிங்காயத் தலைவர் குற்றச்சாட்டு!

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திங்களேஸ்வர சுவாமி, மடங்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக கர்நாடக அரசு அறிவிக்கும் நிதியை, மடங்கள் நேரடியாகப் பெற முடியாது என்றும், 30 சதவீதம் கமிஷனாக கொடுத்தால் மட்டுமே அந்நிதி விடுவிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, யாருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை அளித்தால், உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம்தான் கர்நாடகாவில் பா.ஜ.க நிர்வாகியும் ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பாட்டீல், அப்போதைய அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாகக் குற்றம்சாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ஆளும் பா.ஜ.க அரசு 30 சதவீதம் கமிஷன் கேட்பதாக திங்களேஸ்வர சுவாமி குற்றம்சாட்டியுள்ளது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வருவதால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு, நெருக்கடி முற்றி வருகிறது.

Also Read: சப்பாத்தி சுடும்போது வெடித்த சிலிண்டர்.. செங்கல்பட்டு அருகே மூவருக்கு நேர்ந்த விபரீதம்!