Tamilnadu

“எங்க ஜி படம் எங்கே..?” : ரேசன் கடையில் புகுந்து ரகளை - பெண் பணியாளர்களை மிரட்டிய பா.ஜ.க.வினர் கைது!

மக்கள் சார்ந்த பிரச்சனையில் கவனம் செலுத்தாத தமிழக பா.ஜ.கவினர், அமைதியாக உள்ள தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நியாய விலை கடைகளில் பிரதமர் மோடியின் படம் வைத்திட வேண்டும் என்று தற்போது புதியதாக ஒரு செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மோடியின் படம் வைத்திட வேண்டும் என்று கூறி பா.ஜ.க.வினர் இருபதுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனை அறிந்த காவல்துறையினர், நியாய விலை கடையின் முன்பு பாதுகாப்பில் ஈடுபட்டு, அனுமதியில்லாமல் ஓன்று திரண்டு துண்டு பிரசுகரங்கள் கொடுக்கவும் அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நியாய விலை கடை பெண் பணியாளரை மிரட்டி நியாய விலை கடையின் இருப்பு பட்டியல் கொண்ட பலகையில், மோடி குறித்த தகவலும் ஒன்றிய அரசின் தகவலும் எழுதிட வேண்டும் என்று வற்புறுத்தினர். பா.ஜ.க.வினரின் அராஜகத்தால் பயந்த பெண் பணியாளர், அதனை எழுதினார். இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினர் நியாய விலை கடையின் முன்பு கோஷங்கள் எழுப்பினர்.

பா.ஜ.க.வினரின் இந்த செயல் குறித்து அங்கு திரண்ட தி.மு.க.வினர், பா.ஜ.க.வினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், எதிர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும் போது, தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையினால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இது போன்ற மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத பா.ஜக.வினர், நியாய விலை கடையில் மோடி படம் வைக்க முக்கியத்துவம் கொடுப்பதும், இதற்காக அமைதியாக உள்ள தங்கள் பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைக்கும் வகையில் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கதக்கது. பா.ஜ.க.வினரின் இந்த செயலால், நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் பெண்கள் திரும்பி சென்றதகாவும், இது போன்ற அராஜக செயலை பா.ஜ.க.வினர் கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.

Also Read: “மகனே நீ எங்கள் தேவதை..” - மகனை இழந்த சோகத்தில் ரொனால்டோ உருக்கம் : ஆறுதல் கூறும் ரசிகர்கள் !