Tamilnadu

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை; பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது: ஆக்‌ஷனில் இறங்கிய போலிஸ்!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் வசித்து வருபவர் ஜேசுராஜ், இவரது சகோதரர் மரியராஜ், சகோதரி வசந்தா இவர்களும் அதேபகுதியில் வசித்து வருகின்றனர். இதில் வசந்தா பாளையங்கோட்டை தாலுகா அலுகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கும் அதேபகுதியைச்சேர்ந்த உறவினர் அழகர்சாமி குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பு பெயரும் கூட்டு பட்டாவில் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பான காவல் நிலையத்தில் புகார் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், பிரச்னைக்குரிய இடத்தில் அழகர்சாமி ஏற்பாட்டில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். இதனையடுத்து ஆழ்துளை கிணறு அமைத்தது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் வாக்குவாதமாக இருந்த நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதில் ஜேசுராஜ் , அவரது சகோதரர் மரிய ராஜ் , சகோதரி வசந்தா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வசந்தாவின் கணவர் ஜேசுராஜ் மற்றும் மரியராஜ் மகன் அமோஸ் ஆகிய 2 பேர் படுகாயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அழகர்சாமி தரப்பில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவரது மனைவி பேச்சியம்மாள் மருமகன் செந்தூர் குமார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர். இதுகுறித்து மானூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இச்சம்பவம் தொடர்பாக அழகர்சாமி அவரது மகன்கள் ராஜமணிகண்டன், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மனைவி பேச்சியம்மாள், மருமகன் செந்தூர் குமார் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர்.

சம்பவ இடத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 2 பேர் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். நிலம் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள அழகர்சாமி பா.ஜ.க பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழ்நாட்டின் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் மரணம் - முதலமைச்சர் இரங்கல் !