Tamilnadu

மேனேஜரை கத்தியால் குத்தி ரூ.82 லட்சம் வழிப்பறி.. 200 CCTV ஆய்வு - கொள்ளை கும்பலை கூண்டோடு தூக்கிய போலிஸ்!

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி விஜயகுமார் கம்பெனியில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை பின்தொடர்ந்துள்ளனர். பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்தபோது அந்த கும்பல் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் கத்தியால் விஜயகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்த ரூ.82 லட்சம் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலிஸார் தேடிவந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் இருந்த 200க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம கும்பலை பிடிக்க போலிஸார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பல்சர் வாகனத்தை பயன்படுத்தியது தெரியவந்தது. பிறகு அந்த வாகனத்தின் எண்ணை கொண்டு விசாரணை செய்தபோது, பள்ளிக்கரனை பகுதியைச் சேர்ந்த சந்துரு, ஸ்ரீகாந்த், தனுஷ் ஆகிய மூன்று பேர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. மேலும் இந்த மூன்று பேருக்கு சுப்பிரமணியம் என்பவர் உதவியுள்ளார்.

இதையடுத்து நான்கு பேரையும் போலிஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. 72 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கும்பல் வேறு யாரிடமாவது இதேபோன்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Also Read: நகை வியாபாரியை தாக்கி நகைகள் கொள்ளை.. 48 மணி நேரத்தில் திருட்டு கும்பலை தட்டி தூக்கிய நெல்லை போலிஸ்!