Tamilnadu

காதலிக்காக வாங்கிய கடன்.. வட்டிக்கட்ட முடியாமல் செயின் பறிப்பில் இறங்கிய இளைஞர்: விசாரணையில் பகீர் தகவல்!

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குளச்சல், கருங்கல், இரணி உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர் ஒருவர் அடிக்கடி தொடர் செயின் பறிப்பில் ஈடுபடுவதாக போலிஸாருக்கு புகார்கள் குவிந்துள்ளது. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர். மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று போலிஸார் கருங்கல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.

பிறகு அவரிடம் தீவிர விசாரணை செய்தபோது, வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த சுபின் என்பது தெரியவந்தது. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பெண்ணுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது, அவர் ஏதாவது அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என சுபினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் அவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கி, ஒரு புரோக்கரிடம் அரசு வேலைக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த நபர் வேலை வாங்கி தராமல் அவரை ஏமாற்றியுள்ளார். இதனால் வாங்கிய கடனுக்கான பணத்தையும், வட்டியையும் சுபினால் கட்டமுடியவில்லை. கடன் கொடுத்தவரும் கடனை அடைக்கும்படி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து சுபின் தீடிரென தலைமறைவாகியுள்ளார். பிறகு தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து ஒரு வருடத்திற்கு மேலாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனுக்காக வட்டியும் கட்டி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறகு போலிஸார் சுபினை கைது செய்து அவரிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் ஒரு சொகுசு காரை பறிமுதல் செய்துள்ளனர்.

Also Read: “ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் உடல் கருகி பலி” : ஆந்திராவில் நடந்த சோகம் !