Tamilnadu

“லாரி மோதி பெண் காவலர் மற்றும் இரண்டு வயது பிஞ்சு குழந்தை பரிதாப பலி” : கணவர் கண்முன்னே நடந்த சோகம்!

காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த உமாதேவி (26). இவர் நேற்றிரவு பணிமுடித்துவிட்டு தனது வீட்டிற்கு கணவர் ராஜா மற்றும் இரண்டு வயது மகன் தக்ஷூத்-வுடன் பனப்பாக்கம் நோக்கி சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு கார்களை மோதி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காவலர் உமாதேவி மற்றும் மகன் தக்ஷூத் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி காவல்துறையினர் காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் இரு பிரேதங்களையும் கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி காவல்துறையினர் லாரியை கைபற்றி தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் பெண் காவலரும் அவரது பிஞ்சு குழந்தையும் பரிதாபமாக சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நேற்று அறிவிப்பு.. இன்று சமத்துவநாள் கொண்டாட்டம்: அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை!