Tamilnadu
“தமிழர்களின் பெருமைகளை பறைசாற்ற கீழடியில் ரூ.11 கோடியில் அருங்காட்சியகம்” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப் பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
அப்போது, பொதுப்பணித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டு வழங்கப்பட்டது. அந்தக் குறிப்பேட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகப் பணியானது ரூ.11.03 கோடி செலவில், மொத்தம் 31,919 சதுரஅடி பரப்பளவில் 6 முக்கிய கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குறிப்பேட்டில், “மதுரை கீழடியில் சுமார் 110 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு தொன்மை நகரிய குடியிருப்பு மற்றும் தொழிற்கூடப் பகுதி இருந்தது கண்டறியப்பட்டு ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களைக் காட்சியகப்படுத்திட உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் (Museum) அமைக்கும் பணியானது தமிழ்நாடு பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அகழ்வைப்பக அருங்காட்சியகப் பணியானது ரூ.11.03 கோடி செலவில், மொத்தம் 31,919 சதுரஅடி பரப்பளவில் 6 முக்கிய கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட கட்டடங்களில் கல், உலோகம், மணிகள், தந்தப் பொருள்கள், விலங்குகள் குறித்த தொல்பொருள்கள் மற்றும் சுடுமண் பானைகள் போன்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அகழ்வைப்பகக் கட்டிடங்களின் வடிவமைப்பு, அப்பகுதியில் உள்ள வீடுகளின் கலைநயத்தைப் பறைசாற்றும் விதமாக முற்றம், தாழ்வாரம் மற்றும் மண்டபங்களுடன் அமைக்கப்படவுள்ளன. மேலும், உள்ளூர் மக்களின் கலை மற்றும் கைவினைத் திறமைகளை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் அமைக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!