Tamilnadu

தனது மகளுக்கே திருமணமான நிலையில் இன்னொரு திருமணம் செய்து பணம், நகையுடன் தப்பி ஓடிய பெண்.. நூதன மோசடி!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கதிரவன். 38 வயதாகும் இவர் திருமணத்திற்கு வரன் தேடிவந்துள்ளார். அப்போது அவருக்கு நெல்லையைச் சேர்ந்த தில்லை துரைச்சி என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.

அப்போது அவர் தனக்கு தெரிந்த ஒரு பெண் இருப்பதாக அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து கதிரவனுக்கு கவிதா என்ற பெண்ணை அறிமுகம் செய்துவைத்துள்ளார் தில்லைதுரைச்சி. இதையடுத்து இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திடீரென சனிக்கிழமையில் இருந்து மனைவி கவிதா மற்றும் தில்லை துரைச்சி ஆகிய இருவரையும் காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகையும் மாயமாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கதிரவன் இருவரையும் பல இடங்களில் தேடிப்பார்த்து அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து விசாரணை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கதிரவனை திருமணம் செய்த கவிதாவிற்கு எற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமும் நடைபெற்றுள்ளது. கவிதா, கதிரவனை திருமணம் செய்து அவரது நகை மற்றும் பணத்தை மோசடி செய்தது விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து, இவர்கள் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: வேலை தேடிவரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்: சென்னை போலிஸ் அதிரடி ஆக்சன்!