Tamilnadu

இளமையிலேயே முதுமை தோற்றம் கொண்டிருந்த 20 வயது இளம்பெண்.. வாழ்க்கையில் ஒளியேற்றிய கோவை அரசு மருத்துவமனை!

கோவையைச் சேர்ந்த 20 வயது பெண் 45 வயதைப் போன்ற முதுமை தோற்றத்துடன் இருந்துள்ளார். அவரை நண்பர்களும், உறவினர்களும் கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு Parry Romberg syndrome என்ற அரிதான நோய் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகத்தான் அவர் 45 வயது தோற்றத்துடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் நவீன முறையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். தற்போது அந்தப் பெண் இளமைப் பொலிவுடன் நலமுடன் உள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்தவர்கள் கூறுகையில், "இந்த நோய் தாக்கியவர்கள், முகத்தில் ஒரு பக்கம் தசைகள் இறுக்கியும், கொழுப்பு திசு அறவே நீங்கி வயதான தோற்றத்துடனும் காணப்படுவார்கள். இந்தப் பெண்ணும் இப்படித்தான் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு கொழுப்பை முகத்தில் செலுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சிகிச்சையில் நம் உடலில் இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பான திசுக்களை எடுத்து முகத்தில் செலுத்தப்படும். தற்போது இந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்தால் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் செலவாகக்கூடும்" என தெரிவித்துள்ளனர்.

Also Read: 2 வயது குழந்தையின் வாயில் குத்திய 59 செ.மீ கம்பி.. 45 நிமிடத்தில் அகற்றிய அரசு மருத்துவமனை: நடந்தது என்ன?