Tamilnadu

சிசுவுக்கு பாதிப்பில்லாமல் கர்ப்பிணியின் கட்டி அகற்றம்: எழும்பூர் அரசு மருத்துவர்கள் நிகழ்த்திய சாதனை!

நாட்டில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதன்படி சிகிச்சை முறையை மேலும் நவீனப்படுத்தி விரைவாகவும், நிறைவாகவும் மேற்கொள்ளும் வகையில் தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அண்மையில் இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை சிசுவுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றியிருக்கிறார்கள்.

அதன்படி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை முதல்வர் விஜயா தலைமையிலான மருத்துவக் குழுவினர் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ எடையுடைய கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனைப் படைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அரசு மருத்துவமனை மீதான நன்மதிப்பு மேலும் கூடியிருப்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

Also Read: நாட்டிலேயே முதல் முறை.. அதுவும் அரசு மருத்துவமனையில்.. சிசுவுக்கும் சிறப்பு திட்டம் தொடங்கிய திமுக அரசு!