Tamilnadu

உயிரோடு வந்து நின்ற அடக்கம் செய்த தந்தை: திடுக்கிட்டுப்போன மகன்கள்.. ஈரோடு அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவர் கர்நாடகா, ஈரோடு போன்ற இடங்களில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வருபவர்.

அவ்வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சென்ற மூர்த்தி வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். இதனால் அவரை தேடி மூர்த்தியின் மகன்கள் கார்த்திக், பிரபுகுமார் இருவரும் சுற்றித் திரிந்தும் கிடைத்தப்பாடில்லை.

இந்த நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே சுமார் 55 வயதுடைய ஆணின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக விரைந்துச் சென்றிருக்கிறார்கள் மூர்த்தியின் மகன்கள்.

ஆனால் முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அந்த சடலத்தின் உடலமைப்பு தங்களது தந்தையை போன்று இருந்ததால் அதனை கைப்பற்றி துறையம்பாளையம் கொண்டுச் சென்று உரிய சடங்குகளை செய்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.

இதனால் தங்களது தந்தை இறந்துவிட்டதாக சோகத்தில் மூண்டிருந்த கார்த்திக், பிரபுகுமார் குடும்பத்தினருக்கு அன்றிரவே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கூடிய சம்பவம் காத்திருந்திருக்கிறது.

அதன்படி இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி உயிருடன் திரும்பி வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்திருக்கிறார்.

இதனிடையே இந்த சம்பவம் ஊர் முழுவதும் பரவியதால் உடனடியாக விரைந்து வந்த போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மூர்த்தி இறந்துவிட்டதாக நினைத்து அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கார்த்திக்கும் பிரபுகுமாரும் அடக்கம் செய்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலிஸார் அனுப்பியுள்ளனர்.

Also Read: WEDDING PHOTOSHOOT-ல் நடந்த விபரீதம்..புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!