Tamilnadu

“உங்க கணவரை கடத்திட்டோம்.. 2 லட்சம் கொடுங்க” : போனில் மிரட்டிய மர்ம கும்பல் - பொறிவைத்து பிடித்த போலிஸ்!

திருப்பூர் மாவட்டம், காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி மனினீமேகர். இத்தம்பதிகள் இருவரும் அவிநாசியில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேம் தேதி இரவு வெளியே சென்ற சந்தோஷ் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி பல இடங்களில் தேடிப்பார்த்தும் சந்தோஷ் குறித்தான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மனினீமேகரின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்து, “உங்கள் கணவரை கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 2 லட்சம் பணத்தை கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மனினீமேகரின் செல்போனுக்கு அழைத்த மர்ம நபரின் எண்ணைக் கொண்டு போலிஸார் விசாரணையை தொடங்கினர்.

இதில் அந்த மர்ம நபர் இருக்கும் இடத்தை அறிந்த போலிஸார் அங்கு சென்று சந்தோஷை மீட்டனர். மேலும் இவரை கடத்திய 7 பேரை போலிஸார் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ”அது வெறும் கல்தான்; ஐம்பொன் இல்ல” - 13 லட்சம் கேட்டு ஏமாற்ற முயற்சித்த மாமனார் மருமகன் சிக்கியது எப்படி?