Tamilnadu

“வேன் கவிழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தோர், படுகாயமடைந்தோருக்கு இழப்பீடு”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

திருப்பத்தூர் மாவட்டம் சேம்பரை கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சேம்பரை கிராமத்தில்ம் வேன் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், நெல்லிவாசல் நாடு மதுரா புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் சேம்பரை கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு வேன் மூலம் சென்றபோது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மனைவி துர்கா, அவரது மகள்கள் பவித்ரா, சர்மிளா, துக்கன் என்பவரின் மனைவி செல்வி, வேந்தன் என்பவரின் மனைவி சுகந்தரா மற்றும் குள்ளப்பன் என்பவரின் மனைவி மங்கை ஆகிய ஆறுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இதே விபத்தில் சுமார் 22 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு இலட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: கோர விபத்து: திருமணத்திற்கு செல்லும்போது நடந்த விபரீதம்.. 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து!