Tamilnadu

இரவோடு இரவாக தாய் மகன் கொடூரமாக வெட்டிக் கொலை... திண்டுக்கல் அருகே அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தாயும், மகனும் நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோட்டை அடுத்த குருக்களையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (40). விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரும், இவரது தாய் சௌந்தரம்மாளும் (60) தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டில் நேற்றிரவு தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை அவரது தோட்டத்துக்கு பால்காரர் பால் கறக்க வந்துள்ளார். அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு போலிஸார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து எரியோடு போலிஸார் வழக்குப் பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை!