Tamilnadu
“எல்லாத் துறைகளை விடவும் இதற்குத்தான் முக்கியத்துவம் தருவேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று புதுதில்லியில், மேற்கு வினோத் நகரில் உள்ள தில்லி அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார்.
அப்போது, தில்லி அரசு கல்வித் துறை இயக்குநர் ஹிமான்சூ குப்தா அவர்கள் தில்லி கல்விமுறை பற்றிய முக்கிய கூறுகள் குறித்து எடுத்துரைத்தார். தில்லி அரசுப் பள்ளிகளில் தொழிற்முனைவோர் மற்றும் வணிகம் குறித்த பாடத்திட்டமான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் படிப்பில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை
13 இலட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதற்காக 2021-22ஆம் ஆண்டில் தில்லி அரசால் 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதாகும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தில்லி மாதிரி பள்ளியின் வளர்ச்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டதோடு, அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர், அப்பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, பாராட்டினார். மேலும், அப்பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டு, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்களுடன் உரையாடினார்.
டெல்லி அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட பின்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, “டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் மாடர்ன் பள்ளியை உருவாக்கி, அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை நான் கேள்விப்பட்டேன். அதனால், டெல்லிக்கு வந்த நான் அந்தப் பள்ளியை பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டபோது, நிச்சயமாக நீங்கள் வருகிறபோது நானே வரவேற்று அதை அழைத்துச் சென்று காண்பிக்கிறேன் என்று டெல்லி முதலமைச்சர் அவர்கள் சொல்லி, என்னை இங்கு அவரே அழைத்து வந்திருக்கிறார்கள். அதற்காக முதலில் அவருக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கக்கூடிய எங்களுடைய அரசு, எல்லாத் துறைகளுக்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறதோ, அதைவிட அதிகமான அளவிற்கு கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவத்தை நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இந்தப் பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோன்ற பள்ளிகளை தமிழ்நாட்டில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் முடிவுற்று அந்தப் பள்ளியை நாங்கள் திறக்கிற நேரத்தில், நிச்சயமாக உங்களுடைய முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்களை நாங்கள் அழைக்க இருக்கிறோம். அவரும் வருவார், வரவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உங்கள் மூலமாக நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மொஹலா கிளினிக்கை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 500 மொஹலா கிளினிக்குகள் உள்ளதாகவும், அதனை 1000-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இக்கிளினிக்குகளை தில்லி மெட்ரோ இரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளதாகவும், மகளிருக்கான தனி மொஹலா கிளினிக்குகளை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Also Read
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!