Tamilnadu

இந்து முன்னணி பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்... கொடூர கொலையை அடுத்து அதிரடி நடவடிக்கை!

கடந்த மாதம் அன்னூர் அருகே பைனான்ஸ் அதிபரை கொலை செய்த வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரில் சரவணசுந்தரம் என்ற பைனான்ஸ் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர் அன்னூரில் இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதில் இருந்து விலகி தனியாக பைனான்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், சரவணசுந்தரத்தை தனது ஆட்கள் மூலம் கடந்த ஜனவரி 29ஆம் தேதி கொலை செய்தார்.

இதுதொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜேந்திரன் உட்பட 3 பேரை அன்னூர் போலிஸார் கைது செய்தனர். இந்நிலையில் இந்து முன்னணி ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள இந்து முன்னணி ராஜேந்திரனிடம் குண்டர் சட்டத்திற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Also Read: கஞ்சா விற்றால் குண்டர் சட்டம்.. ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ : அதிரடி காட்டும் DGP சைலேந்திரபாபு !