Tamilnadu

நாட்டிலேயே முதல் முறை.. அதுவும் அரசு மருத்துவமனையில்.. சிசுவுக்கும் சிறப்பு திட்டம் தொடங்கிய திமுக அரசு!

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாறுபட்ட கால நிலைகள் , மாறிவிட்ட வாழ்வியல் நடைமுறைகள் , மக்கட்பேறு என்பது சிக்கலாக மாறி போன நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் குறைபாடு இன்றி வளர்கிறதா என்பதை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனில்லா குழந்தைகள் பெறவும் , மாற்றுத்திறனாளிகளற்ற சமுதாயம் பெறவும் , கர்ப்பிணி தாய்மார்கள் சிக்கலில்லா சுகப்பிரசவம் பெற இந்தியாவிலேயே முதல் முறையாக, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மையத்தில் ஒரு திட்டமாக தாய் சேய் நலத்தொகுப்பு திட்டமானது நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை தனியார் மருத்துவமனைகளிலும், தனியார் பரிசோதனை மையங்களில் மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக அரசு மருத்துவமனை ஒன்றில் இத்திட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.

இந்த பரிசோதனையின் மூலம் கருவுற்ற 3 மாதத்திற்குள்ளாகவே குழந்தையின் உடல் குறைபாடுகள் கண்டறிந்து, அதனை சரி செய்வதற்கான சிகிச்சைகளை வழங்க முடியும். இதனால் பிறக்கும்போது குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்க முடியும். இதனால் மாற்றுத்திறனாளிகள் இல்லா சமுதாயம் அமைக்க முன்மாதிரியாக இத்திட்டம் உதவுகிறது.

மேலும், பெரும்பாலான பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே நடைபெறுவதாகவும், அந்த எண்ணிக்கையை குறைக்க இந்த பரிசோதனை சிகிச்சை முறை பிரசவத்தில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து, சுகப்பிரசவம் நடைபெற பெரிதும் உதவுதாக இருக்கும் என மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Also Read: ”மாணவர்கள் ஃபுட் போர்டில் தொங்கிக்கொண்டு பயணித்தால்...” - டி.ஜி.பி சைலேந்திரபாபு விடுத்த முக்கிய உத்தரவு!