Tamilnadu

சினிமா பார்த்து செயின் பறிப்பு கொள்ளையனாக மாறிய வாலிபர்.. தட்டித் தூக்கிய போலிஸ்!

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவர் தனது வீட்டின் அருகே கடந்த 25ஆம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கிருத்திகா அணிந்திருந்த 4.5 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து கிருத்திகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபடும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு போலிஸார் தீவிரமாகத் தேடினர். இதில் நெய்வேலியைச் சேர்ந்த திவாகர் என்ற வாலிபர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

நெய்வேலியைச் சேர்ந்த திவாகர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் அவரது வேலை பறிபோயுள்ளது. இதனால் சென்னை வந்து வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து செயின் பறிப்பில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளார்.

இதற்கான கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான அதிகமான படங்களைப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில்தான் போலிஸாரிடம் திவாகர் சிக்கியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்து 4.5 சவரன் நகையை போலிஸார் மீட்டுள்ளனர்.

Also Read: கஞ்சா விற்றதை போட்டுக் கொடுத்ததால் ஆத்திரம்; ஐகோர்ட் வழக்கறிஞரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்!