Tamilnadu

‘இதுதான் தமிழ்நாடு’.. மூன்று மத முறைப்படி மூன்று முறை திருமணம்: மயிலை இளைஞர் அசத்தல் - குவியும் பாராட்டு!

மயிலாடுதுறை மாவட்டம் ரஸ்தா மணவளித் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். பொறியியல் பட்டதாரியான இவர் கிராம அலுவலராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலேயே அனைத்து மத நண்பர்களிடமும் புருஷோத்தமன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது திருமணத்தை மூன்று மதங்களின் முறைப்படியும் நடத்தவேண்டும் எனத் தீர்மானித்துள்ளார்.

அவரது ஆசைக்கு அவரது பெற்றோரும், மணப்பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த புவனேஸ்வரியை மூன்று மதங்களின் சடங்குகளின்படி திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். இந்த திருமணத்திற்காக மூன்று மதங்களின் முறைப்படி மூன்று விதமாக பத்திரிகை அச்சிட்டு நண்பர்களுக்கு வழங்கியுள்ளார்.

முதல் நாளில் கிறிஸ்துவ மத முறைப்படியும், இரண்டாவது நாள் முஸ்லிம் மதத்தின் படியும், மூன்றாவது நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துள்ளார். புருஷோத்தமனின் இத்தகைய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து புருஷோத்தமன் கூறுகையில், சமய நல்லிணக்கத்திற்கும், அனைத்து மதத்தினருக்கும் உறவினர்களே என்பதனை உணர்த்த இத்தகைய முயற்சியை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மதத்தால் வேறுப்பட்டிருந்தாலும், மனதால் ஒற்றுமையுடன்தான் பழகி வருகிறோம். அதனால், இந்த நல்ல முயற்சியை செய்து காட்டியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: பார்சல் மட்டுமே தந்ததால் தகராறு.. கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட நபர் - ஒருவர் பலி : கேரளாவில் பயங்கரம்!