Tamilnadu

ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு.. உணவகத்தை மூடி பாடம் புகட்டிய பஹ்ரைன் அரசு!

கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் பர்தா- ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை பந்த்ரகர்ஸ் கல்லூரி முதல்வர் வாசலில் தடுத்து நிறுத்திய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி - கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில் இந்துத்வா மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஹிஜாப் அணிந்து கல்வி வளாகங்களுக்குச் செல்ல அனுமதிக்கக்கோரி 6 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நீதிமன்றம், கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்; ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தில் அத்தியாவசிய விஷயம் அல்ல எனத் தீர்ப்பு அளித்திருந்தது.

அதுமட்டுமின்றி, அரசு உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்து, ஹிஜாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கல்லூரியில் ஹிஜாப் அணிய வேண்டாம், காவியும் அணிய வேண்டாம் எனத் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் வலதுசாரி கும்பல் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தடைவிக்கும் போக்கும் அதிகரிக்கும் வேளையில், வெளிநாடுகளுக்கு வேலைச் சென்ற இடத்தில், சில வலதுசாரிகள் இந்துத்வா கருத்தை திணிக்கும் வகையில் செயல்பட்டு பின்னர் அங்கு கைது செய்யப்பட்டும், நிறுவனங்களில் இருந்து விரட்டியட்டிக்கப்பட்ட சம்பவம் எல்லாம் சமீபகாலத்தில் நடந்து வந்துள்ளதாக செய்திகளின் மூலம் தெரியவந்தது.

அந்தவகையில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண்ணுக்கு அனுமதி மறுத்த இந்திய உணவகத்தை பஹ்ரைன் அரசு மூடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் லான்டர்ன்ஸ் உணவகம் (Lanterns restaurant) அமைந்துள்ளது. இந்த உணவகத்திற்கு வந்த முஸ்லிம் பெண்ணை அங்கிருந்த மேலாளர் ஒருவர் தடுத்து நிறுத்தி, உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த விவகாரம் பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையத்திற்குச் சென்றது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம், சுற்றுலா மற்றும் நிறுவனங்கள் தொடர்பான 1986 ஆம் ஆண்டின் ஆணைச் சட்டம் 15 இன் படி உணவகத்தை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் சட்டங்களை மீறும் கொள்கைகளைச் செயல்படுத்துவதை உணவகங்கள் தவிர்க்க வேண்டும். மக்களுக்கு எதிராக, குறிப்பாக அவர்களின் தேசிய அடையாளத்தைப் பற்றி பாகுபாடு காட்டும் அனைத்து செயல்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த நாயை வேட்டையாடி சிறுத்தை புலி : குலைநடுங்க வைக்கும் CCTV காட்சி!