Tamilnadu

“முதலமைச்சராக முதல் வெளிநாட்டுப் பயணம்” : தமிழக தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுடன் செல்லும் முதல்வர்!

தமிழ்நாட்டின் முதலமைச்சாக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன. ஒன்றிய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு சார்பிலும் அங்கு அரங்கு அமைக்கப்படுகிறது.

கைத்தறி, விவசாயம் சிறு மற்றும் பெரு தொழில்களை தொடங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த அரங்கு அமைய இருக்கிறது.

இந்த கண்காட்சியின்போது பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.

துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். முன்னதாக, தி.மு.க எம்.பி., எம்.எம்.அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் துபாய் சென்றுள்ளனர். 4 நாட்கள் துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் சென்னை திரும்புகிறார்.

2021ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா 2வது அலை பரவல், கனமழை, வெள்ளம், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.

இதுதான் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரான பின்னர் முதல்முறை வெளிநாட்டுப் பயணமாக துபாய் வருகைதர இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க துபாய் வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களின் பார்வை தமிழகம் நோக்கியிருக்கும் நிலையில், இந்தப் பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Also Read: துபாய் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துபாய், அபுதாபியில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?