Tamilnadu

மீண்டும் விறகு அடுப்பு.. மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல், டீசல் விலை: மோடி அரசை சாடும் பெண்கள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மறறும் சமையல் ஏரி வாயு விலையை குறைக்காமல் தினமும் விலையை அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளாகி பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி எரிபொருள்களின் விலை உயராமல் இருந்தது. தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் விலையை குறைத்தார்.

இதனால் ஏழை மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஒன்றிய அரசும் பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் ஏரி வாயுக்கான விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஒன்றிய அரசு இந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்த்தியுள்ளது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 102.39 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் உயர்ந்து 103.14 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதே போன்று நேற்று 92.44 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து 93.20 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 984 ரூபாய்க்கு வழங்கப்பட்ட காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 1034 ஆக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் பாமர மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒன்றிய அரசின் இந்த விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு செல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியதால் நியாயவிலை கடைகளில் வழங்கிய மண்ணெண்ணெய் நிறுத்தி விட்டதாகவும் பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

Also Read: “மக்களின் கலாச்சார உணர்வுகளை ஒன்றிய அரசு மதிக்கவில்லை” : ஜம்மு - காஷ்மீருக்காக குரல் எழுப்பிய தி.மு.க MP!