Tamilnadu

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் கைது.. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில் போலிஸார் அதிரடி!

வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு அளித்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் AE சுகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகார் அளித்த சில நாட்களிலேயே நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாதிக்கப்பட்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துர்கா சங்கர் தாக்கட் என்பவர் கடந்த 1993ஆம் ஆண்டு ஏற்காட்டில் 1.04 ஏக்கர் நிலத்தை சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான சுகுமார் மூலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை தங்கள் குடும்பத்திலுள்ள ஐந்து நபர்கள் பெயரில் கிரயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து துர்கா சங்கர் மீண்டும் மத்திய பிரதேசம் சென்றுவிட்டார். இந்த நிலையில் அவ்வப்போது சேலம் வரும் துர்கா சங்கர் தாக்கட் ஏற்காட்டில் சென்று நிலத்தை பார்வையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை விற்றுத் தரும்படி சண்முக சுந்தரம் என்பவரை தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.

அவர் அந்த நிலத்தை விற்பனைக்காக காட்டியபோது தான் அந்த நிலம் போலியாக பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து துர்கா சங்கர் சேலம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார். ஆனால் அப்போது இருந்த அ.தி.மு.க ஆட்சியின் நெருக்கடி காரணமாக அ.தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாமல் இருந்தனர்.

இந்த நிலையில் துர்கா சங்கர் தாக்கட் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் ஒன்று அனுப்பி வைத்தார். புகாரினை தொடர்ந்து தற்போது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த AE சுகுமார் கடந்த 1994ஆம் ஆண்டு போலியான ஆவணங்கள் தயார் செய்து சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த ஜானகிராமன்

பால்ராஜ், என்.பி.சங்கர், கே.ஆர்.ரமேஷ் ஆகியோர் பெயரில் கிரயம் செய்து விற்பனை செய்து உள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலிஸார் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை விற்பனை செய்த புகாரின் அடிப்படையில் AE குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிக்குகிறார் எடப்பாடி பழனிசாமி.. குடும்பத்தினருக்காக முறைகேடு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!