Tamilnadu

கும்மியாட்டம் ஆடிய பெண் மேயர்... அசந்துபோன பார்வையாளர்கள்! #Video

கரூரில் நேற்று நடைபெற்ற கொங்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்துகொண்டு கும்மியாட்டம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியமூட்டினார்.

கொங்கு நாட்டின் பாரம்பரிய ஆன்மிக நடனமாக கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மியாட்டம் கருதப்படுகிறது. இந்தக் கலை கொங்கு நாட்டில் பல்வேறு இடங்களில் பயிற்றுவிக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்படுகிறது.

கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மியாட்டத்தை சிறு வயது பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்மணிகள் வரை ஒரு குழுவாக கற்றுக்கொண்டு கோயில் விழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகளில் ஆடி இறைவனை வழிபடுவார்கள்.

கொங்கு ஒயிலாட்டக் குழு பயிற்சியாளர்கள் சார்பில் கரூரில் சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மியாட்டம் பயிற்சியளிக்கப்பட்டது.

இதையடுத்து, பயிற்சி பெற்றவர்களின் அரங்கேற்றம் இன்று நடைபெற்றது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, சிறுமிகள் முதல் பெண்கள் வரை 150 பேர் கலந்து கொண்ட வள்ளி கும்மியாட்டம் அரங்கேறியது. இறைவனை வாழ்த்தி பாடும் பாடல் இசைக்கு தகுந்த வகையில் வண்ணமயமாக உடையணிந்த பெண்கள், காலில் சலங்கை ஒலி அதிர நடனமாடினர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசனும் பெண்களுடன் இணைந்து வள்ளி கும்மியாட்டத்தை ஆடி வந்திருந்த பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

தொடர்ந்து ஆண்கள் கலந்துகொண்ட ஒயிலாட்ட அரங்கேற்றமும் நடைபெற்றது. கொங்கு நாட்டின் பாரம்பரிய நடன அரங்கேற்றத்தை திரளான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

Also Read: மாநகராட்சி கொடி... 0001 கார்.. சென்னையை நிர்வகிக்கப் போகும் மிக இளம் வயது மேயர் பிரியா!