Tamilnadu

அண்ணா பல்கலை. 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்? - “மாணவர்களே.. கவலை வேண்டாம்” : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அனைவரது விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை, ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெற்றன.

ஆன்லைன் தேர்வில் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் போட்டதாகவும், அவர்கள் தேர்ச்சி பெறமாட்டார்கள் எனவும் தகவல்கள் பரவின.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடைத்தாள்களை அனுப்பி வைக்காததால், அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலைக்கழகம் குறித்து தவறான செய்திகள் வெளிவருகின்றன. தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும். ஆன்லைன் தேர்வுகளால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: ”திராவிடத்தின் நிலைத்த புகழுக்கு சான்று சென்னை ’அண்ணா மேம்பாலம்’ ”- Times of India ஏடு சிறப்புக் கட்டுரை!