Tamilnadu

“2 மகன்களோடு தூக்கில் தொங்கிய தாய்” : பெற்றோர் சொன்ன ‘அதிர்ச்சி’ காரணம் - நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி குறிஞ்சி தமிழ். இந்த தம்பதிக்கு விமல் பிரணவ், கார்த்திக் பிரணவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் மாமியார் மருமகளுக்கு இடையே நல்ல உறவு இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தம்பதியர் இருவரும் சண்டைபோட்டுள்ளனர். அப்போது மனைவி குறிஞ்சி தமிழ் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வீட்டில் இருந்த ஒரு அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டுள்ளார்.

பின்னர், அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உறவினர்கள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு குழந்தைகளுடன் சேர்த்து குறிஞ்சி மலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து குறிஞ்சி தமிழின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 'திருமணத்தின்போது நாங்கள் கொடுத்த 20 பவுன் போதாது என அப்போதே கூறினார்கள். பின்னர் அடிக்கடி எனது மகளை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வரதட்சணை கொடுமை காரணமாக எனது மகள் இந்த முடிவு எடுத்துள்ளார்.

எனவே அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க முடியாது; மாஜிஸ்திரேட்டிடம் கேளுங்க : பப்ஜி மதன் மனைவிக்கு ஐகோர்ட் காட்டம்!