Tamilnadu

சென்னை அண்ணா நகரில் தீவிபத்து; 10 வாகனம்; 60 வீரர்கள்; ஒரு மணிநேர போராட்டம் -அசத்திய தீயணைப்புத்துறையினர்

சென்னை அண்ணா நகர் 5-வது அவென்யூவில் west wood என்ற பெயரில் மூன்று மாடிக் கட்டிடம் உள்ளது. இதில் தரைதளத்தில் தனியார் சிறு நிதி நிறுவனம் வங்கியும், முதல் தளத்தில் ஐடி நிறுவனமும், இரண்டாவது தளத்தில் இந்தியா புல்ஸ் என்ற மற்றொரு தனியார் நிறுவனமும், மூன்றாவது தளத்தில் கட்டுமான நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது. 40 பேர் இந்த கட்டடத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

முதல் தளத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் உள்ள ஏசி இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை அணைப்பதற்கு அங்குள்ள தீயணைப்பான் கொண்டு ஊழியர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர். தீயானது கட்டிடத்தில் உள்ள அனைத்து தளங்களுக்கும் பரவியது.

இதனை எடுத்து அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் அலறி அடித்து ஓடினர். தீயானது கட்டிடம் முழுவதும் பரவி புகைமூட்டம் ஆனது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீவிரமாக தீயை அணைக்க முற்பட்டனர்.

மூன்றாவது தளத்தில் மாட்டிக்கொண்ட 6 ஊழியர்களை மீட்பதற்கு ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. மூன்றாவது தளத்தில் உள்ள கண்ணாடிகளை உடைத்து கிரேன் மூலம் பத்திரமாக தீ விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். உடனடியாக விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது தண்ணீர் பாய்ச்சி தீயானது அணைக்கப்பட்டது. சுமார் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை அணைத்தனர். இதில் சுபாஷ் பாபு என்ற தீயணைப்பு வீரர் மூன்றாவது தளத்தில் மாட்டிக்கொண்ட நபர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றினார். .

கட்டட வளாகத்தில் தீயணைப்பு துறையின் விதிகளை முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அண்ணாநகர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Also Read: “புதிய கேப்டன் சாஹல்.. பட்லருடன் ஓப்பனிங்”: பதறிப்போன ரசிகர்கள் - ஏம்ப்பா.. ப்ரொமோஷனுக்கு ஒரு அளவில்லையா?