Tamilnadu

போதை பொருளை பவுடராக்கி.. நைஜீரியன் உட்பட ஐவர் கைதானது எப்படி? சென்னை போலிஸ் அதிரடி!

சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை (Drive Against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறை குழுவினர் தீவிரமாக கண்காணித்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை செயின்ட் தாமஸ் மலை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் கடந்த மார்ச் 14ம் தேதியன்று காலை 8 மணியளவில் ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உள்ள கரூர் வைஷ்ய வங்கி வளாகம் உள்ள கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் மூன்று நபர்கள் போதை பொருள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதன் பேரில் வங்கி அமைந்துள்ள கட்டடத்தின் அறையில் தங்கி போதை பொருட்களை விற்பனை செய்த திருச்சியை சேர்ந்த நந்தகுமார் (23), சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த திருளாபதி (24), கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜய் (27) ஆகிய மூவரை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 58 கிராம் எடையுள்ள MD என்ற ஆம்பெட்டமைன் எனும் போதை பொருள், 3 செல்போன்கள், 1 எடை இயந்திரம், 15 சிரஞ்ச்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேற்குறிப்பிட்ட போதை பவுடரை உடலில் செலுத்தி போதைக்காக பயன்படுத்தியதும், இந்த போதை பொருள் அருண்பாண்டியன் என்பவரிடம் இருந்து வாங்கி பயன்படுத்தி வந்ததும், மற்ற நபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. பின்னர் கைதான மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அருண்பாண்டியனை பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்ட தனிப்படையினர் நேற்று (மார்ச் 15) அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் நைஜீரியாவைச் சேர்ந்த ஒனரா அகஸ்டின், ஜெசின் சுக்குஉடி ஆகிய இருவரும்தான் இந்த போதை பொருள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

பெங்களூரில் இருந்த இருவரையும் கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்து 60 கிராம் ஆம்பெட்டமைன் போதை பொருளையும், 51,950 ரூபாய் பணமும், 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்துள்ளனர்.

அதில், நைஜீரியாவைச் சேர்ந்த ஒனரா அகஸ்டின், ஜெசின் சுக்குஉடியிடமிருந்து அருண்குமார் மொத்தமாக போதை பொருளை வாங்கி மேற்குறிப்பிட்ட கைதான மூவர் மற்றும் சிலருக்கு விற்றது தெரிய வந்தது. பின்னர் ஒனரா, ஜெசினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Also Read: Drone கேமரா உதவியுடன் ரவுடியை விரட்டி பிடித்த தமிழ்நாடு போலிஸ்: சினிமாவை மிஞ்சும் சேஸிங் காட்சி (video)