Tamilnadu
“வெளியே வா பேசணும்..”: சலூன் கடை உரிமையாளரை வெட்டிக்கொன்ற இந்து முன்னணி பிரமுகர் - கோவையில் நடந்தது என்ன?
கோவையில் சலூன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவரை போலிஸார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியில் சசிகுமார் (35) என்பவர் அங்கு சலூன் கடை நடத்தி வந்தார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். சசிகுமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நகர துணைத்தலைவர் ராம் என்பவருக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சசிகுமாரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று சசிகுமார், அவரது தாய் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 12 மணியளவில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. எழுந்து வந்து கதவை திறந்த சசிகுமாரை வெளியே நின்றிருந்த ராம் உள்ளிட்ட 2 பேர் உன்னிடம் பேச வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசிகுமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
சசிக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது உறவினர்கள், அவர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக செல்வபுரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொலையை இந்து முன்னணி பிரமுகர் ராம், அவரது நண்பர் இளங்கோ ஆகியோர் செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து இந்து முன்னணி பிரமுகர் ராம் (30), இளங்கோ (29) ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!