Tamilnadu

மனைவி குத்திக் கொலை.. மகள்களையும் கொல்ல முயன்றவர் தற்கொலை : நாகர்கோவிலை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ். இவர் வனஜா ஜோஸ்மின் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு மஞ்சு, அர்ச்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஜோஸ் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து மனைவியின் நடத்தை மீது கணவருக்குச் சந்தேகம் எழுந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பின்னர் கடந்த சனிக்கிழமையன்று மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் ஜோஸ் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் வீட்டிலிருந்து மகள்களையும் கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, அவர்கள் சத்தம் போட்டுக் கத்தியதால் பயந்துபோன ஜோஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மகள்கள் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளனர். இது பற்றி போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “வெளியே வா பேசணும்..”: சலூன் கடை உரிமையாளரை வெட்டிக்கொன்ற இந்து முன்னணி பிரமுகர் - கோவையில் நடந்தது என்ன?