Tamilnadu

மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்திய அதிமுக பெண் நிர்வாகி மகன்: 10 ஆண்டு சிறை விதித்த மதுரை சிறப்பு நீதிமன்றம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி. மாவட்ட அ.தி.மு.க மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மகன் அருண்குமார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் செய்தி தொடர்பு உதவி அலுவலராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் வத்தலக்குண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த அ.தி.மு.க கொடிகட்டி வந்த காரை தேசிய போதை தடுப்பு பிரிவு போலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

காரில் மூட்டை மூட்டையாக 250 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக வளர்மதியின் மகன் அருண்குமார் அவருடன் தொடர்புடைய ரவி, ஸ்ரீராம் ஆகிய மூவரை கைது செய்த போலிஸார் மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து அருண்குமார் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு உதவி அலுவலர் பணியிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை முடிவில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியது.

அதில், போதைப்பொருள் கடத்திய அருண்குமார் அவரது கூட்டாளிகள் ரவி, ஸ்ரீராம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கியது. ரூபாய் ஒரு லட்சம் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.