Tamilnadu

லாரி கடத்தல் விவகாரத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்... கொலை திட்டம் அம்பலம் - பின்னணி என்ன?

பிரபல ரவுடியை கொலை செய்ய, பணத்திற்காக மணல் லாரி கடத்திய மூவரை போலிஸார் கைது செய்தனர்.

சென்னை மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் (54), இவர் சொந்தமாக மணல் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவுப் பணியை முடித்துவிட்டு தனது லாரியை தனது வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது தனது லாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலிஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் போரூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டு சுங்கச்சாவடி ஆகிய 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக பரமக்குடி, ராமநாதபுரத்தில் தலைமறைவாக இருந்த எண்ணூரை சேர்ந்த குட்டி மோகன் (33), அம்பத்தூரை சேர்ந்த பொன்முருகன் (50), சிலம்பரசன் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், எண்ணுாரைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகருக்கு எதிராக மோகன் செயல்பட்டு வந்துள்ளார். இதனால், இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இதையடுத்து, தனசேகரனை தீர்த்துக்கட்ட பணம் தேவை என்பதால், லாரியை கடத்தியது தெரியவந்தது. லாரியை விற்கும் நேரத்தில் மூன்று பேரும் பிடிபட்டனர். லாரியை கடத்திய மோகன் மீது, வெடிகுண்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: 1.5 வயது பேத்தியை கொன்ற பாட்டியின் காதலன் கைது: விசாரணையில் வெளியான பகீர் தகவல்; கேரளாவில் அதிர்ச்சி!