Tamilnadu

என்.ஆர்.இளங்கோ மகன் ராகேஷ் மறைவு: ’உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!

என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ராகேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவின் அன்புமகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு - மிகுந்த வேதனைக்கும் - சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன்.

ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகக் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் என்.ஆர்.இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

என்.ஆர்.இளங்கோ எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது. அன்புக்குரிய மகனை இழந்து வாடும் என்.ஆர். இளங்கோவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: பைக்கில் சென்றபோது பரிதாபமாக பலியான பேருந்து நடத்துனர்கள்; செங்கல்பட்டு அருகே லாரி மோதியதில் நடந்த கோரம்!