Tamilnadu

தமிழகம் முழுவதும் கஞ்சா சப்ளையா? ஆந்திர கும்பலின் திட்டத்தை முறியடித்து அதிரடி காட்டிய சென்னை போலிஸ்!

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலிஸார் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த சேக் மதினா பாஷா (29), துர்கா பிரசாத் (30) மற்றும் லோகநாதன் துர்கா (36) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் இவர்களது பையில் 12 கிலோ கஞ்சா இருப்பதை கண்ட போலிஸார் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பூந்தமல்லியை சேர்ந்த பிரதீப் ராஜா என்பவரிடம் கஞ்சா வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் நெமிலிச்சேரி பகுதியில் பதுங்கியிருந்த பிரதீப் ராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்யும்போது, பூச்சி அத்திப்பட்டு பகுதியில் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தேவா என்பவரின் குடோனில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதிரிபாக தொழிற்சாலை குடோனில் போலிஸார் சோதனை மேற்கொண்டபோது 62 கிலோ கஞ்சாவை வாகனத்தில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாகன ஓட்டுநரான திண்டிவனத்தை சேர்ந்த வரதராஜன் என்பவரை போலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தேவா தனது குடோனில் பதுக்கி வைத்து தமிழகம் முழுவதும் கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த முறையும் 500 கிலோவுக்கு மேல் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து பல பகுதிகளில் விற்பனை செய்யும் போது சிக்கியதும் போலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடோன் உரிமையாளரான தேவாவை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: “கறிக்கடை கத்தியால் தந்தை மகனை குத்திய பழ வியாபாரி” : மாவுக்கட்டு போட்ட மும்பை போலிஸ் - நடந்தது என்ன?