Tamilnadu

"காதல் தோல்வி.. காதலி புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய NTK பிரமுகர் : போலிஸ் வலைவீச்சு!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய்ரூபன். இவர் அப்பகுதியில் பறவைகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக உள்ள விஜய்ரூபன், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதற்கிடையே இவருக்கு நிரந்திர வருமானம் இல்லாத காரணத்தினால் இவர் காதலித்த பெண்ணுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே, அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் வரை அவரின் பெற்றோர் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய்ரூபன், காதலிக்கும்போது அந்தப் பெண்ணுடன் எடுத்தப் புகைப்படம், அவர் கொடுத்த காதல் கடிதம் என அனைத்தையும் போஸ்டராக அச்சடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த விவகாரம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை வீட்டிற்கு தெரியவர, அவர்கள் பெண்ணின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை களக்காடு காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விஜய்ரூபனை போலிஸார் தேடி வருகின்றனர். காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் விஜய்ரூபன் தலைமறைவானதால் போலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களுடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தோல்வியடைந்த வெறியில் திமுக கவுன்சிலரையும், அவரது தம்பியையும் தாக்கிய அதிமுகவினர்: பெரம்பலூரில் பரபரப்பு!