Tamilnadu

மக்களே உஷார்... கொசுவர்த்தி சுருளால் நடந்த விபரீதம் : தீயில் கருகி வாலிபர் பரிதாப பலி!

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். வாலிபரான இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் தினமும் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தூங்கும்போது கொசுக்கடிக்காக, கொசுவர்த்தி சுருள் ஏற்றிவைத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்றும் தூங்குவதற்கு முன்பு கொசுவர்த்தி சுருள் ஏற்றிவைத்து விட்டு அதன் அருகே படுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே கொசுவர்த்தி சுருளின் நெருப்பு பகுதி அவர் போர்த்திப் படுத்திருந்த புடவை மீது பட்டுள்ளது.

இதனால் புடவை முழுவதும் தீ வேகமாக பரவியதால் அவருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டு வலிதாங்க முடியாமல் அலறியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து தீயில் கருகியிருந்த மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு வாலிபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பிரியாணிக்கு பில் கட்டாமல் கத்தியை காட்டி மிரட்டி அராஜகம்: சென்னை போலிஸிடம் வசமாக சிக்கிய பிரபல ரவுடிகள்!