Tamilnadu

மூத்த பத்திரிகையாளரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்.. பதறவைக்கும் CCTV காட்சி!

புதுச்சேரியில் இருந்து வெளிவரும் நமது முரசு என்ற மாலை நாளிதழின் உரிமையாளரும், மூத்த பத்திரிகையாளருமான உதய நாராயணன் என்பவர் நேற்று இரவு 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்து வழிமறித்த, 2 மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மூத்த பத்திரிகையாளர் உதய நாராயணனுக்கு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு புதுச்சேரி மற்றும் பிற மாநில பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பத்திரிகையாளர் உதயநாராயணனை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பத்திரிகையாளர் உதயநாராயணனை தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கங்கள் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Also Read: அரசு மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி சட்டவிரோத கருக்கலைப்பு.. 2 குழந்தைகளை பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி!