Tamilnadu

அதிவேகமாக வந்து அப்பளமாக நொறுங்கிய கார்; பள்ளி மாணவன் பலி; இருவர் கவலைக்கிடம்; பல்லடத்தில் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலை அம்மா பாளையம் பிரிவு அருகே பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தமிழ்வாணன் (16), தினேஷ் (17), ஸ்ரீ (15) , கோபி சங்கர் (17), லெனின் ராஜ் (17) , ஹரிகிருஷ்ணன் (17) ஆகிய 6 பேரும் தமிழ்வாணின் உறவினருக்கு சொந்தமான இண்டிகா காரில் மங்கலம் நோக்கி சென்றுள்ளனர்.

அம்மாபாளையம் பகுதியை கடக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் வலது புறம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியில் பின்புறமாக அதிவேகமாக மோதி அப்பளம் போல நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த தமிழ்வாணன் (16) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். உடன் இருந்த ஐந்து பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலிஸார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் பலியான தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்த ஐந்து பேரில் மேலும் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலிஸார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: டிரைவர் தூங்கியதால் விபரீதம்? ஆற்றில் கவிழ்ந்த கார்; மணமகன் உட்பட 9 பேர் பலி; ராஜஸ்தானில் கோர சம்பவம்!