Tamilnadu

“10 நிமிஷம் வெய்ட் பண்றீங்களா.. ப்ளீஸ்”: பயணிகள் அனுமதியோடு ஜனநாயக கடமை ஆற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர்!

தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதர், பணியின்போது பயணிகளின் அனுமதியோடு 10 நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1 நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கு நடைபெற்று வருகிறது. அதில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லபுரம் பேரூராட்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போது நடந்து வருகிறது. பொ.மல்லாபுரம் 5வது வார்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இன்று அதிகாலை பணிக்கு சென்ற ஸ்ரீதர் பாலக்கோட்டில் இருந்து சேலத்திற்கு பொதுமக்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் தனது வாக்குப்பதிவு மையமான பொ.மல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வந்தவுடன் பேருந்தில் இருந்த பயணிகளிடம், “என்னுடைய ஜனநாயக கடமையை செய்து விட்டு வருகிறேன். 10 நிமிடம் பொறுத்திருங்கள்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

பேருந்தில் பயணித்த பயணிகள் நீங்கள் வாக்களித்து வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் வாக்களித்துவிட்டு வாருங்கள்” என்று அனுப்பி வைத்தனர். பின்னர் ஸ்ரீதர் தன்னுடைய ஜனநாயக கடமையை முடித்துவிட்டு வந்து பயணிகளுக்கு நன்றி தெரிவித்து, தன்னுடைய பேருந்து பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றார். இச்செயலால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்தப் ஓட்டுனரை வெகுவாக பாராட்டினர்

Also Read: “21 மாநகராட்சிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!