Tamilnadu

“இஸ்லாமியப் பெண்களிடம் ஹிஜாப்பை அகற்றும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர்” : தட்டி தூக்கிய போலிஸ்!

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்-அமீன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவின் போது பா.ஜ.க பூத் ஏஜென்ட் இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு அல்-அமீன் பள்ளியில் பா.ஜ.க ஏஜென்ட் ஆக செயல்படும் கிரிராஜன் என்ற பா.ஜ.க நிர்வாகி, வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றக்கோரி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்குப்பதிவை நிறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து மற்ற கட்சியினர் வாக்குபதிவு மையத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் கிரி ராஜனை வாக்கு பதிவு மையத்தை விட்டு அப்புறப்படுத்தினர். இதனையடுத்து மீண்டும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடங்கள் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பாக கூறிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், “இந்தியா மத சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களும் அவர்கள் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை உள்ளது. மத அடையாளங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கரூரில் பணப்பட்டுவாடா புகார்.. அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த செல்போன்களை பறிமுதல் செய்தது பறக்கும் படை!